Sunday, April 24, 2005

Maya

அசல் வலைப்பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: கறுப்பி

திக்விஜேய் சிங்கின் மாயா திரைப்படம் 2001ம் ஆண்டு ரெறொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது.

மூன்றாம் உலகநாடுகளின் கலாச்சாரப் பின்னணி பெண்களை எவ்வாறு வதைக்கின்றன என்பது எல்லோரும் அறிந்ததே. முக்கியமாகப் பல சமூகங்களின் கட்டுப்பாடுகளும், மூடநம்பிக்கைகளும் பெண்களை பாலியல் வதைக்கு உள்ளாக்கி வருகின்றன என்பதை “மாத்தம்மா” போன்ற விவரணப்படம் மூலம் நாம் அறியக்கூடியதாக இருந்தது. இறுக்கமான கலாச்சாரப் பின்னணியுடன், வறுமையும் சேர்ந்து கொண்டு இந்தியா போன்ற நாடுகளில் வாழும் பெண்களின் வாழ்க்கை முறையை எப்படியெல்லாம் கொண்டு செல்கின்றன என்பதை பெண் திரைப்பட இயக்குனரான ஜானகி விஸ்வநாதன் தனது “குட்டி”, “கனவு மெய்ப்படல் வேண்டும்” போன்ற திரைப்படங்கள் மூலம் எடுத்துக் காட்டிப் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
இருந்தும் ஒருத்தி பெண்ணாய்ப் பிறந்த ஒரே காரணத்திற்காக அவளிற்கு அதிக பட்ச அளவிலான உடல், உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு சமூகத்தின் கலாச்சாரம் உருவாக்கப்பட்டிருக்கும் கொடுமையை நான் “மாயா” திரைப்படம் பார்த்த போது உணர்ந்தேன்.


என்னை முற்றுமுழுதாக பேச்சிழக்கவும், அதிரவும் வைத்த திரைப்படம் இதுவென்பேன்.
12 வயது மாயா தனது குடும்ப வறுமை காரணமாக தனது மாமா வீட்டில் அன்பான மாமா, மாமி, 11 வயதுடைய அவர்களது மகன் ஆகியோருடன் வாழ்ந்து வருகின்றாள். ஒரு சிறுமிக்கு கிடைக்கக் கூடிய அத்தனை வசதியும், அன்பும் மாயாவிற்குத் தாராளமாகவே கிடைக்கின்றது. திரைப்படத்தில் முற்கால் பகுதி மாமா, மாமி அவள் மேல் வைத்திருக்கும் அன்பு கண்டிப்பு என்பன மூலமும், அவர்கள் வாழும் அழகிய கிராமத்தில் மாமன் மகனுடன் சேர்ந்து கொண்டு சிறுவர்களுக்கேயான குறும்புடன் ஊரைச் சுற்றி லூட்டி அடிப்பதும் என்று அழகான காட்சிகளுடன் மனம் நிறைகின்றது.

மாயா வயதிற்கு வருகின்றாள். உடல் மாற்றங்கள் பற்றிய போதிய அறிவு இல்லாத சிறுமி அவள். மாமா, மாமி பூரித்துப் போகின்றார்கள், மாயாவின் பெற்றோரிற்குத் தகவல் போகின்றது. எல்லோருமாகக் கூடி மகிழ்ந்து போகின்றார்கள். எம்மவரைப் போலவே சடங்கிற்கான ஆயத்தங்கள் நடக்கின்றது. பட்டுச் சேலைகள் பலகாரங்கள் என்று வீடு களை கட்டுகின்றது. சடங்கிற்காக கோயில் பூசாரியுடன் சேர்ந்து நல்ல நாட் பார்க்கின்றார்கள். எந்த வித சங்கடத்தையும் பார்வையாளர்களுக்குத் தராமல் திரைப்படம் யதார்த்தமாக நகர்கின்றது.
சடங்கிற்கான நாள்: எல்லோரும் பட்டுடுத்தி கோயிருக்குச் செல்கின்றார்கள். ஊர் மக்கள் கோயில் முன் திரண்டு நிற்க, நான்கு பூசாரிகள் மாமா, மாமி, பெற்றோர் சகிதம் பட்டுச் சேலை உடுத்திய மாயா கோயிலைச் சுற்றி வருகின்றாள். ஊர் மக்களுக்கு கோயில் வீதியல் பந்தி போட்டு உணவு பரிமாறப்படுகின்றது. கோயிலைச் சுற்றி வந்த நான்கு பூசாரிகளும் மாயாவும் கோயிலின் உள்ளே செல்ல மற்றவர்கள் விருந்தினரைக் கண்காணிக்கச் சென்று விடுகின்றார்கள். விறைத்த முகத்துடன் ஒற்றைக் கையால் மாயாவை அணைத்த படி வாய் மந்திரத்தை முணுமுணுக்க மூத்த பூசாரி முன்னே செல்ல மற்றைய பூசாரிகள் அவரைப் பின் தொடர்ந்து நடக்கின்றார்கள். இருண்ட அறையினுள் விளக்கு வெளிச்சத்தில் சிறுமி மாயா பயந்த முகத்துடன் சிணுங்குகின்றாள்.

அடுத்த காட்சியாக மாயாவினதும், பூசாரிகளினதும் உடைகள் நிலத்தில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மரத்தினால் ஆன குந்து ஒன்றில் மாயாவின் உடைகளைந்த இரண்டு கால்களும் மட்டுமே காட்டப்படுகின்றன. ஓவ்வொரு பூசாரியாக அருகில் வந்து அவள் கதறக் கதற உடல் உறவு கொண்டுவிட்டு விலகுகின்றார்கள். மாயா எனும் சிறுமி நான்கு கிழட்டுப் பூசாரிகளால் அவர்கள் சம்பிரதாயத்தின் படி ஆசீர்வதிக்கப்படுகின்றாள்.
அந்த ஊரில் கோயிலின் உள்ளே நடப்பது பற்றி பிரக்ஞை இன்றி உணவில் கவனம் செலுத்துகின்றார்கள். மாயாவின் கதறல் கேட்டு மாமாவின் 11 வயது மகன் மட்டும், அவளிற்கு ஏதோ கெடுதல் நடப்பதை அறிந்து கோயில் கதவைத் தட்டிக் கத்துகின்றான். அதனை கண்ட அவனது தந்தை அவனை அடித்து விரட்டுகின்றார். மாயா தனது கன்னித் தன்மையை கிழட்டுப் பூசாரிகளிடம் அவள் பெற்றோர்கள் அன்போடு வளர்த்த மாமா மாமியின் சம்மதத்துடன் இழந்து ஆசீர்வாதம் பெறுகின்றாள். உடல் களைத்த நிலையில் நடக்கும் சக்தி இன்றி வந்தவளை அவளது மாமியும் தாயாரும் தூக்கி அணைத்துக் கொண்டு செல்கின்றார்கள். அவர்களும் இந்த அவலத்ததைத் தாண்டி வந்தவர்கள் தானே.
இப்படியான கேவலமாக கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டு இந்த நூற்றாண்டிலும் மக்கள் கடைப்பிடிக்கின்றார்கள் என்றால்?
இத்திரைப்படத்தை இயக்கிய திக்விஜெய் வெறும் கற்பனைக் கதை என்று எண்ணி விடாதீர்கள். பல காலமாக ஆராய்சி செய்து தகவல்கள் திரட்டி ஆதாரங்களுடன் இந்தத் திரைப்படத்தை எடுத்துள்ளேன் என்று கூறி திரைபட ஆரம்பததிற்கு முன்பே துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இது ஒரு சமூகத்தின் கலாச்சாரம். பல ஆண்டு காலமாக அக்கலாச்சாரம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அது அம்மக்களின் தனித்தன்னை அதனை நாம் ஏன் கேலிப்படுத்த வேண்டும் இது நான் கேள்விப்பட்ட விமர்சனம் ஒன்று..
பெண்ணே உன் கதி இதுதானே உன் பெண்மை ஆண்மைக்குப் பலிதானா?

This page is powered by Blogger. Isn't yours?