Friday, April 22, 2005

Million Dollar Baby

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: நாராயண்

ஆஸ்கார் கொண்டாட்டங்கள் முடிந்து, எல்லாரும் போற்றி, பாராட்டி, அவரவர் வேலைகளைப் பார்க்க போனபின், மிக மெதுவாக இந்திய திரையரங்குகளில் மில்லியன் டாலர் பேபி, வெள்ளிக்கிழமை வந்திறங்கியது. முதல் நாள் டிக்கெட் கிடைக்கவில்லை. ஒரு பாக்ஸிங் கதை என்று கேள்விப்பட்டவுடனே, எந்த விமர்சனங்களையும் நான் படிக்கவில்லை. ஏனெனில் சில வருடங்களுக்கு முன் இதைப் போல ஒரு பாக்ஸிங் வீரனின் கதையை பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் பாதிப்பில் உழன்றது நினைவுக்கு வந்தது. அதனாலேயே விமர்சனங்களுக்கு தடா (அ) பொடா.

ஒரு வழியாக சனி இரவு காட்சிக்கு டிக்கெட்டினை ரிசர்வ் செய்து வைத்து போனோம். போகும்போதும் ஒரு சொதப்பல், ரொம்ப சீக்கிரமா சத்யம் திரையரங்குக்கு வந்து விட்டோம் என்று நினைத்ததால், பக்கத்திலிருக்கிற ரிலையன்ஸ் வெப் வெர்ல்டுக்கு போய் அகலபாட்டையில் ஆப்பிளில் வந்திருக்கிற புதுப்பட டிரைய்லரும், ஐபிலிமிலின் முதல் உலகப்படங்கள் டிரைய்லரும் பார்க்க போய் உட்கார்ந்து, பொழுது போனது தெரியாமல்,சடாலென கடிகாரத்தைப் பார்த்து, அரக்க பறக்க ஒடிவந்து உள்ளேப் போனால், 5 நிமிஷ படம் போயே போயிந்தி.

படத்தினைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை. இரண்டு வரிகளில் சொல்லிவிட்டு போய்விடலாம். பாக்ஸிங் சேம்பியன் ஆகும் ஆசையுடன் இருக்கும் பெண், பாக்ஸிங் ஜிம் நடத்தும் பயிற்சியாளர் + பாக்ஸிங் மேனேஜர், அவரின் நண்பன், இவர்களை சுற்றி சுழலும் கதை. எப்படி, முதலில் பயிற்சியாளாரால் உதாசீனம் செய்யப்பட்ட பெண், பின் அதே பயிற்சியாளாரால் பயிற்சி கொடுக்கப்பட்டு, உலக சாம்பியன்ஷிப்பினை அடைந்து, பின் மிகவும் நெகிழ்ச்சித்தரதக்க இறுதி முடிச்சோடு முடியும் படம். 4 ஆஸ்கார் விருதினை வாங்கி குவித்திருக்கும் படம். பெண் பாக்ஸராக நடித்திருக்கும் ஹிலாரி ஸ்வாங்கின் நடிப்பினை ஏற்கனவே பாய்ஸ் டோண்ட் க்ரை படத்தில் பார்த்து பிரமித்து போனவன் நான். மார்கன் ப்ரீமேன், கிளிண்ட் ஈஸ்ட்வுட் போன்ற பழம் தின்று கொட்டைப் போட்டவர்களின் நடிப்பினைப் பற்றி எழுதுவது சிறுபிள்ளைத்தனம்.

ஆனால், இந்தப்படம் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது, லெனின் "நாக் அவுட்". தேசிய விருது பெற்ற குறும்படம். இறந்து கிடக்கும் ஒரு ஏழை குத்துச்சண்டை வீரனின் நிலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். நண்பர் சத்யேந்திரா ("சத்யா"வில் அமலாவிடமிருந்து, செயினை திருடிக் கொண்டு போகும் திருடனாக நடித்திருப்பார். மிகச் சிறந்த மாற்று சினிமா நடிகர். பன்மொழி வித்தகர்) மிக அருமையாக நடித்திருப்பார். இந்த படமும், மில்லியன் டாலர் பேபியின் முடிவும் ஏறக்குறைய ஒன்றுதான்.

குத்துச்சண்டை என்பது விளையாட்டா இல்லை, எல்லா மனிதர்களுக்குள்ளும் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தின் வெளிப்பாடா ? வெறிக் கொண்டு கத்தும் பார்வையாளர்களின் உற்சாங்களை தாங்கி, தன்னோடு விளையாடுபவனை மரண அடி அடிக்கத்தூண்டுவது எது ? உணவுக்காக, பிற உயிரினங்களை தாக்கும் விலங்குகளைக் கூட மன்னித்து விட்டு விடலாம். விளையாட்டு எனக் கூறிக்கொண்டு வெறித்தனமாய் அடுத்தவரை காயப்படுத்துதலும், உடலால் பலவீனமடைய செய்தலும், எந்த விதத்திலும் நாகரீகமான மனிதர்களை முன்னிறுத்துவதில்லை. இதில் கிக் பாக்ஸிங் என்றொரு வகையுண்டு. இதில் கால்களும் உபயோகப்படுத்தப்பட்டு எதிர் அணி வீரர்களைத் தாக்குவார்கள். எத்தகைய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

என்ன கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், நாம் அடுத்த தலைமுறைக்கு ? சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் WWF என்றழைக்கப்படும் ரைஸ்லிங் பெடரேஷனின் மனிதத்தனமையற்ற விளையாட்டு என்கிற பெயரில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லுதலும், கையில் கிடைத்ததைக் கொண்டு பிறரை அடிப்பதும், ஒருவரின் அங்கங்களை தாக்கி ஊனப்படுத்தலையும், குழந்தைகள் சர்வ சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது நாம் இன்னமும் மனித மேன்மையில் ஒரு சிறு அடியை கூட எடுத்துவைக்கவில்லை என்பதை தான் உணர்த்துகிறது. ரோமானிய கலோசியங்களில் அடிமைகளின் மீது சிங்கங்களையும், விலங்குகளையும் ஏவி விட்டு, அதனை வேடிக்கைப் பார்க்கும் காட்டுமிராண்டித்தனமிருந்தது. கிளேயேடிட்டர்கள் விலங்குகளோடோ, சக அடிமைகளோடோ போரிட்டு உயிர் பிழைத்தல் கேளிக்கையாக பார்க்கப்பட்டது. 21-ஆம் நூற்றாண்டிலும் பெரிதாய் நாம் வளர்ந்துவிடவில்லை என்பதற்கு சான்றுகள் தான் WWFம், ப்ரொப்ஷனல் கிக் பாக்ஸிங்கும், குத்துச்சண்டைப் போட்டிகளும். ஒரு மனிதனின் திறமையை முன்னிறுத்தி அடுத்தவரை தோற்கடித்தல், அதுவும் ஆரோக்கியமான முறையில், என்பது தான் சிறந்த விளையாட்டாக இருக்க முடியும். இதைத்தாண்டி, சக மனிதனை கொலைவெறியுடன் ரத்தகளாரியாய் தரையில் சாய்த்தலை எந்த விளையாட்டிலும் சேர்க்க முடியாது. இது நம்முள் இருக்கும் மிருகத்திற்கு தீனிப்போடும் காட்டுமிராண்டித்தனம்.

வாங்கிய குத்துகளாலும், வீழ்த்திய நபர்களாலும், இன்று குத்துச்சண்டையின் திருஉருவாக திகழும் முகமது அலியின் நிலையென்ன ? பார்க்கின்சன் (அல்லது அல்சைமரா ?) நோயின் உச்சக்கட்டத்தில், நிற்கக்கூட திராணியற்று, நடுநடுங்கிக் கொண்டு இருக்கிறார், எல்லாம் உடலில் வாங்கிய குத்துக்களின் பின்விளைவுகள். அது அப்படியென்றால், மிருகத்தனத்தினை ஊட்டி வளர்த்து, காதை கடித்து, பெண்ணை கற்பழித்து, ஜெயில் கம்பிக்கும், கோர்ட்டுக்கும் இடையில் வலம் வருகிறார் மைக் டைசன். தளர்ச்சியாலும், உடல் பலவீனத்தாலும் நரம்புகள் பாதிக்கப்பட்டு, அரசாங்கத்தின் பணத்தினை எதிர்நோக்கியிருக்கும் எத்தனையோ மல்யுத்த, குத்துச்சண்டை வீரர்களின் கண்ணீர்கதைகள் அவ்வப்போது செய்திகளில் அடிபடும். இத்தனையும் தாண்டி, மனதால் வளரும் வன்முறையினை விளையாட்டு என்கிற பெயரில் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

வரலாற்றிலிருந்து மனிதர்கள் பாடம் கற்றுக் கொள்ளவே மாட்டார்களா?

This page is powered by Blogger. Isn't yours?