Friday, April 22, 2005

Motorcycle Diaries: சே

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: கறுப்பி

2004ம் ஆண்டு ரொறொண்டோ திரைப்படவிழாவின் போது நான் பார்க்க விரும்பும் திரைப்படங்களுக்கா ஒரு பட்டியலைத் தயாரித்தேன். எனக்கான நேரத்திற்குள் “மோட்டசைக்கிள் டையரி” வரவில்லை. மிகவும் கவலையாக இருந்தது. இருந்தும் திரைப்படவிழா வந்த பின்னர் ஏதாவது ஒரு திரையரங்கில் வெளிவரும் அப்போது பார்த்துக் கொள்ளுவோம் என்று என்னை ஆறதல் படுத்திக்கொண்டேன். நான் எதிர் பார்த்தது போலவே இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு திரையரங்கில் வெளிவந்ததை அறிந்து சென்று பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருந்தது. இருந்தும் இத்திரைப்படத்தில் “சே” ஆக நடித்த நடிகர் கயேல் காசியா பெர்னால் மிகவும் மென்மையான தோற்றம் உள்ளவராக இருப்பதால் மிக நன்றாக அவர் நடித்திருந்தும் “சே” போல் புரட்சியாளனான பிரதிபலிப்பை அவர் தரவில்லையோ என்று தோன்றுகின்றது.

மிக இளவயதில் ஒரு புரட்சியாளனாக இருந்து தனது கொள்கைக்காக மரணதண்டனை கொண்ட நாயகன் “சே” (எர்னெஸ்டோ சேகுவாரா) இவரின் வாழ்க்கையின் ஒரு காலப்பகுதியை அதாவது அவர் வட அமெரிக்காவிற்கு தனது நண்பனான அல்பேட்டோ கிறனாடோவுடன் மேற்கொண்ட மோட்டசைக்கிள் பயணத்தின் (பழைய ஒரு மோட்டசைக்கிளில் ஆரம்பித்துப் பின்னர் நடை ஹைக்கின் என்று மாறிப்போனது) அனுபவங்களை “சே” யின் டையரியில் இருந்தும் அல்பெட்டோவின் புத்தகத்திலிருந்தும் பெற்று படமாக்கியுள்ளார்கள். இப்பயணத்தின் போது 7 மாதங்கள் தொடர்ந்து 7500 மைல்களிற்கு பயணித்துள்ளார்கள்.


எர்னெஸ்டோ குவாரா ஆஜன்டீனாவின் ரொசாறியோ எனும் இடத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து அவரது இரண்டாவது வயதில் கடுமையான ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காகவே கொர்டோபாவிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர். குடும்ப பாசம் மிகுந்தவராக இருந்த போதும் “சே” ஒரு நாடோடியைப் போலவே வாழ்க்கையை ஓட்டினார். புரட்சிகரமாக புத்தகங்களையும் தலைவர்களையும் இளவயதிலேயே ஆராயத்தொடங்கிய இவர் ஒரு மருத்துவ மாணவன்.
(“மோட்டசைக்கிள் டையரி” திரைப்படம் பற்றிய விமர்சனத்தை ஏற்கெனவே மாண்டிரீஸர் தனது புளொக்கில் எழுதிவிட்டார்)

இனி –

பெப்ரவரி மாத உயிர்மையில் “திருஉரு” வாக “சே” ஐ எப்படி உலகம் உருமாற்றி விட்டிருக்கின்றது என்பது பற்றி ஒரு கட்டுரை அ.மாக்ஸ் ஆல் எழுதப்பட்டிருந்தது. அப்போது என் மனதில் எதற்காக “மோட்டசைக்கிள் டையரி”யை நான் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலாக இருந்தேன் என்ற கேள்வி எழுந்தது. அ.மாக்ஸ் கூறியிருந்தது போலவே நெல்சன் மண்டெல்லோவின் சுயசரிதையோ யசீர் அரபாத்தின் வாழ்க்கை வரலாறோ படமாக வந்திருந்தால் இப்படி நான் ஆர்வத்துடன் போய்ப் பாத்திருப்பேனா? கேள்விக்குறிதான். ஒரு நவநாகரீகத் தோற்றத்தில் “சே” இருப்பது அவரது உடை, தொப்பி, தோற்றம் போன்றவை அவரை உலகெங்கும் ஒரு “திருஉரு” வாக மாற்றி விட்டிருக்கின்றது என்பது உண்மை. இருந்தும் “சே” தனது நாட்டு மக்களுக்காக மட்டும் போராடிய மனிதர் இல்லை. முற்றுமுழுதான ஒரு மனிதாபிமானி. பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே குரல் கொடுத்த மனிதர் எனும் போது யசீர் அரபாத்திலும் மண்டெலாவிலும் இருந்து இவர் சற்று வேறுபடுகின்றாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஒரு நாடோடி பாதிக்கப் பட்ட மக்களை எங்கு காணினும் அவர்களுக்காகக் குரல் கொடுத்தவர். எனவே இவரைத் “திருஉரு” வாக ( அவரின் தோற்றம் ஒரு காரணமாக இருந்த போதும்) உலகமக்கள் கொள்வதில் தவறென்ன? இவர் இறப்புக் கூட இவர் மண் மொழி இனத்துக்கானதல்ல

பொதுமகன், எவனொருவனை விசுவாசிக்கின்றானோ? அவனை தனது தலைவனாக வரிந்து கொள்கின்றான். முற்றுமுழுதாகத் தவறிழைக்காதவர் என்று ஒருவரும் இல்லை. “சே” குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கியதை அவரை தலைவனாக் கொள்ளும் மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். இந்த அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கையில் கிட்லரும், முசோலினியும் கூட அவர்களது விசுவாசிகளால்
ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாகவே கொள்ளலாம். எமது சிந்தனைக்கு ஏற்ப நாம் விசுவாசிக்கும் தலைவர்களை நாம் தான் அடையாளப்படுத்தல் வேண்டும். எந்த ஒரு தலைவன் பற்றியும் விசுவாசி பற்றியும் கேள்வி எழத்தான் போகின்றது. இதுபோல்த் தான் அ.மார்க்ஸ் “சே”யின் மீது வைத்த கேள்வியும்.

This page is powered by Blogger. Isn't yours?