Friday, April 22, 2005

Page 3

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: நாராயண்

வழக்கமாக நான் விரும்பி பார்ப்பது தென்னமரிக்க படங்கள். சமீபத்தில் பார்த்தது மோட்டார் சைக்கிள் டைரி. ஏற்கனவே மாண்டீயும்,, டிசே தமிழனும் இதனை அலசி, பிழிந்து, காயப்போட்டு விட்டதால், சேவுக்கு ஒரு சல்யூட்டோடு, அங்கிருந்து எஸ்கேபாகிவிடுவோம்.

சமீபத்தில் வந்த ஹிந்தி படங்களில் என்னை உறுத்திய படம் Page 3. ப்ளாக், ஸ்வதேஷ் என்று ஆஸ்காரினை குறிவைத்து எடுக்கப்படும் படங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. அதுவும் ப்ளாக் என்னைப்பொறுத்தவரை ஒரு திறமையான சாமர்த்தியமான இயக்குநனின் அழகாய் எடுக்கப்பட்ட படம் என்பதை தாண்டி, எந்த பாதிப்பினையும் உண்டாக்காத படம். ஸ்வதேஷ் ....... ஆவ்......வ்வ்வ்வ்வ்..... இரண்டு சிட்டிகையோடு, கொட்டாவி விடுவதை நிறுத்த முயற்சித்து முடியாமல் தோற்றுபோய் தூக்கம் வந்த படம்.

குறைந்த செலவில், பெரிய, தெரிந்த முகங்கள் இல்லாமல், களமிறங்கி கலக்கிக்கொண்டிருக்கும் படம் (மாநகரம், மகாநகரங்களில் மட்டுமே) பேஜ் 3. பேஜ் 3 என்பது உயர்மட்ட சமூகத்தினரின் பார்ட்டி, அந்தரங்கம்,சந்திப்பு, கிசுகிசுக்கள் என்று அல்லாடும் நிலவரங்கள் அடங்கிய நாளிதழ்களில் வரும் பக்கம். கிட்டத்திட்ட இந்தியாவின் எல்லா பத்திரிக்கைகளிலும் ஏதேனும் ஒரு வகையில் இந்த பேஜ் 3 க்கு ஒதுக்கி ஷோ காட்டுகிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா இதில் முதலிலிடத்தில் இருக்கிறது. முதல் பக்கத்தில் அரசியல் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக கீளிவேஜ் காட்டும் ஒரு மாடல் வண்ணத்தில் கண்டிப்பாக இடம்பெற்றிருப்பார். [எப்பப்பா, டைம்ஸ் சென்னை எடிஷன் வருது...இதோ வருது, அதோ வருதுன்னு வடிவேலு கணக்காக பில்-டப்பிலேயே காலத்தை ஒட்றாங்கப்பா ;-)]

பேஜ் 3, மத்திய தரவர்க்கத்தின் அபிலாஷைகளையும், பணம், புகழ் மற்றும் அங்கீகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கும் இன்றைய இளைஞர்/ஞிகளையும், உயர்மட்ட, பணக்கார சமூகத்தின் கேவலமான முகங்களையும், மாறிவரும் இந்தியாவின் பாலியல் சிந்தனைகளையும் உள்ளடக்கிய படம். உலகபடங்களுக்கு இணையாக என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டாமல், ஹிந்தி சினிமாவின் எல்லைகளுக்குள் "ஐட்டம் சாங்" உட்பட வைத்துக்கொண்டு, புதிதாய் ஒரு விசயத்தை சொல்ல முயற்சி செய்திருக்கும் படம். மதுகர் பண்டார்கரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த படத்தில் எனக்கு தெரிந்த நடிகர்கள் மிகக்குறைவு. கொங்கனா சென் (Mr. & Mrs. Iyer), பொமன் ஈரானி (முன்னாபாய் எம்.பி.பி.எஸ் - வசூல்ராஜாவின் ஒர்ஜினல் ஹிந்தி பதிப்பு), அதுல் குல்கர்னி (ஹே ராமில் வரும் இந்து தீவிரவாத ராம் அபயங்கர் மற்றும் ரன்னில் மீரா ஜாஸ்மினின் ரவுடி அண்ணனாக வருபவர்) மற்றும் பலர்.

கதை இன்றைய பம்பாயில் நடக்கிறது. மாதவி சர்மா (கொங்கனாசென்) நேஷன் பத்திரிக்கையின் Page 3 எழுதும் நிருபர். அவருடைய வேலை பார்ட்டி நடக்கும் இடங்களுக்கு சென்று அதனைப் பற்றி எழுதுவது. நேஷன் பத்திரிக்கையின் எடிட்டர் தீபக் சூரி (பொமன் ஈரானி) மற்றும் அந்த பத்திரிக்கையின் குற்றவியல் நிருபர் விநாயக் மானே (அதுல் குல்கர்னி). மாதவி, ஒரு ப்ளாட்டில் இரண்டு பெண்களோடு இருக்கிறாள், ப்யர்ல் ஒரு விமான பணிப்பெண், காயத்ரி, ஹிந்தி சினிமா நடிகையாக முயற்சி செய்து கொண்டிருப்பவள். மாதவியின் காதலன் ஒரு ஆண் மாடல், அவளின் நண்பன் அபிஜித் ஒரு ஒரினச்சேர்க்கையாளன். மாதவியின் வேலை பார்ட்டிகளுக்கு செல்வது, அங்கு நடக்கும் விசயங்களைப் பற்றி எழுதுவது, இதன் மூலம் சமூகத்தின் மிக உயர்தட்டில் இருக்கும் அனைவரின் அறிமுகங்களும் அவளுக்கு உண்டு. அவ்வாறான ஒரு அறிமுகம், ஹிந்தி சினிமாவின் உச்சநட்சத்திரம் ரோஹித்குமார். ரோஹித்குமாரின் சிபாரிசோடு, தன் நண்பி காயத்ரியை ஹிந்தி சினிமாவின் ஒரு பெரிய இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்கிறாள். அந்த இயக்குநர் அவளோடு தவறாக நடக்க முயற்சிக்கிறார். பின்பு காயத்ரி, ரோஹித்குமாரோடு நெருங்கி பழக ஆரம்பிக்கிறாள். பார்ட்டியில் சிநேகம் பிடித்த ஒரு பணக்கார, வயதான ஹோட்டல் அதிபரோடு ப்யர்ல் காதலிக்க ஆரம்பிக்கிறாள் ( ஒரு அற்புதமான சீன் ஒன்றுண்டு. ப்யர்லும், அவளின் வயதான காதலனும் மாதவியின் ப்ளாட்டிற்கு வரும் காட்சி. காயத்ரியும், மாதவியும், ப்யர்லை தனியே கூட்டிச் சென்று, "இந்த கிழவனையா கல்யாணம் செய்து கொள்ளப்போகிறாய். நீயும் இவரும் ரோட்டில் நடந்தால் அவர் உனக்கு தந்தையா என்று கேட்பார்கள் என்பதற்கு, ப்ய்ரிலின் பளிச்சென்ற பதில் "போடி முட்டாள், 2 மில்லியன் பெராரி காரில் நான் இறங்கும் போது யாரும் வயதைப் பார்பதில்லை")

ரோஹித்குமாருடன் பழகிய காயத்ரி, கர்ப்பமாகிறாள், அதனை கலைக்க சொல்லி ஆள் அனுப்பியதால், காயத்ரி, தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் இடத்தில் ஏற்படும் போலீஸ் பார்மாலிட்டிகளை அங்கு வந்திருக்கும் விநாயக் மானேவின் சிபாரிசின் பேரில் மாதவி நடத்துகிறாள். விநாயக் மானேவுடன் ஒரு வாரம் குற்றங்கள், பாம் வெடிப்புகள் நடக்குமிடங்களில் பயணிக்கத் தொடங்குகிறாள். அப்போது தான் உலகின் நிஜ முகங்கள் புரிய ஆரம்பிக்கிறது. பிளாஸ்டிக் புன்னகைகளும், அலட்டல்களும் நிரம்பிய Page 3 என்பது பத்திரிக்கையாளனின் வேலை அல்ல, சமூகத்தில் அன்றாடம் நடக்கும் விசயங்களை பார்ப்பது தான் என்று புரிகிறது. ஒரு சமூக சேவகியின் துணையோடு, உத்தரபிரதேஷத்திலிருந்து கடத்தி வரப்பட்டு, பணக்கார பார்ட்டிகளில் (pedophile) சிறுவர் செக்ஸ்க்காக விற்கப்படும் சிறுவர்களைப் பற்றி தெரிந்து, போலிஸின் துணையோடு அவர்களை மீட்கிறாள். ஆனாலும் அந்த செய்தி அவளின் பத்திரிக்கையில் இடம்பெற அனுமதிக்கபடவில்லை மற்றும் அவளை வேலையிலிருந்து நீக்குகிறார்கள். [பத்திரிக்கையின் நிறுவனர், எடிட்டரிடம் சொல்லும் விளக்கங்கள் "தாபர் குழுமம்தான் மிக அதிகமான விளம்பர வருவாயை நம் பத்திரிக்கைக்கு தருகிறது. அதன் முதலாளியை சிறுவர் செக்ஸில் ஈடுபட்டார் என்று பத்திரிக்கையில் போட்டால் மொத்த விளம்பரவருவாயும் நின்றுவிடும். அதனால் அந்த விவகாரத்தை போடாதே" - எடிட்டர் - "சார், இது ஒரு முக்கியமான செய்தி." - முதலாளி - யார் அந்த பெண்? "Fire the bitch" ] இதற்கிடையே அவளின் காதலனும், அவளின் ஒரின சேர்க்கை நண்பனும் ஒன்றாய் செக்ஸில் இருப்பதை பார்த்துவிடுகிறாள். அங்கேயும் பிரிவு ஏற்படுகிறது. விநாயக் அவளிடம் உண்மையே சொல்வது எப்படி என்று கூறிவிட்டு, நாம் இப்போது இருக்கும் ஸிஸ்டத்திலிருந்தே, ஸிஸ்டத்தை எப்படி எதிர்ப்பது என்று சொல்லிதருகிறான். இன்னொரு பத்திரிக்கையில் மீண்டும் ஒரு Page 3 நிருபராக சேருகிறாள். அவளின் இன்னொரு பார்ட்டியின் சந்திப்போடு படம் முடிகிறது. அவள் பார்க்கும் கடைசி பார்ட்டியிலும் அவள் முதலிலிருந்து பார்த்த எல்லார் முகங்களும் பிளாஸ்டிக் புன்னகைகளோடு வலம் வருகிறார்கள்.

அவளின் முன்னாள் காதலன் ஒரு பேரிளம்பெண்ணின் வசமிருக்கிறான். காயத்ரி, அவளை ஹாரஸ் செய்ததாக சொன்ன இயக்குநரின் அடுத்த படத்தில் நடிப்பதாக சொல்லுகிறாள். ரோஹித்குமாரும், காயத்ரியும் ஒன்றாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். தாபர் குழும முதலாளி, வேறொரு வெளிநாட்டுகாரரோடு ஒயின் குடிக்கிறார். நேஷன் பத்திரிக்கையின் முதலாளியும், மும்பாயின் கமிஷ்னரும் ஒன்றாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். கோம்ஸை* போலவே இன்னொருவன் பார்ட்டியில் போதை மருந்து விற்கிறான். அவளின் ஒரினசேர்க்கை நண்பன் இன்னொரு விளம்பரமாடலோடு பேசிக்கொண்டிருக்கிறான். இறுதியில் அவளின் ஒரின சேர்க்கை நண்பனைப் பார்த்து அவள் சொல்லும் ஒரு வசனம், சற்றே புன்முறுவலையும், சமூக வெளிப்பாட்டையும் சொல்லும். "Next time, lock the door".

இந்த படத்தில் மிக முக்கியமாய் சொல்லவேண்டிய பாத்திரங்கள், விநாயக் மானேயின் துணையோடு, போதை பொருட்கள் விற்போரை வேட்டையாடும் இன்ஸ்பெக்டர் போன்ஸ்லேயாக வரும் உபேந்திர லிமாயே, மிக அருமையாக கிராமத்திலிருந்து வந்து நேர்மையான போலீஸாக இருக்கும் ஒரு நிஜமான போலீஸை கண்முன் நிறுத்துகிறார். போதை பொருள் விற்று பிடிபடும் கோம்ஸ்*ஸினை என்கொவுண்டரில் கொல்லும் செயல் மிக நேர்த்தி. பம்பாயின் மிக மறைவான, இருளான இடங்களில் செய்தி சேகரிக்கும் அதுல் குல்கர்னி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். கொங்கனா சென், பொமன் ஈரானி, ப்யர்லாக வரும் பெண் அனைவரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் உண்டாக்கும் கேள்விகள் ஏராளம். ஜனநாயகத்தின் ஐந்தாவது தூண் எனப்படும் பத்திரிக்கை உலகில் நடக்கும் சமரசங்கள், ஒரு சமூதாயத்தின் ஊடகங்கள் எவ்விதமான சமரசங்களோடு செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கின்றன, உயர்மட்ட சமூகத்தின் ஆரோக்கியமற்ற உணர்வுகள், பணமும், புகழும், அங்கீகாரமும் மட்டுமே வாழ்க்கை என நினைத்துக்கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்கள், பணத்திற்க்காக எவ்வாறு, பத்திரிக்கை தருமம் பலியிடப்படுகிறது, மத்திய தரவர்க்க இளைஞர்களின் அபிலாஷைகள், அவர்களின் கனவுகள், கனவுகளுக்காக பலியிடப்படும் நேர்மை, தன்னம்பிக்கை, எல்லா இடங்களிலும் மக்களின் இருப்பு எவ்வாறு ஒரு சில தனிநபர்களிடம் சிக்கியிருக்கிறது, எவ்வாறு முதலாளிகள் சமூகத்தை தன் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள், வெஸ்டர்னைஸ்சேஷன் என்பது எவ்வாறு தவறாக இந்தியாவில் கையாளப்படுகிறது, முன்னேறிய நாடுகளை பார்த்து முன்னேற்றங்களை கைக்கொள்ளாமல், தண்ணியடிப்பதையும், டான்ஸ் ஆடுவதையும் மட்டுமே தவறாக எடுத்துக்கொண்டு அதனை முன்னிறுத்தும் உயர்தட்டு சமூகங்கள் என விரிகிறது.

இந்த படத்தில் காணப்படும் ஆச்சரியங்கள். ஒரு ஒரினச்சேர்க்கையாளனை நண்பனாக வைத்திருக்கும் ஒரு பெண், சிகரெட் பிடிக்கும் சுய சம்பாத்திய பெண்கள் (தமிழில் அப்படி ஒரு சீன் வைக்க முடியுமா, அவ்வளவுதான், திருமா, மாலடிமை கோஷ்டிகள், தமிழ் கலாச்சாரம் கெட்டுப்போய்விட்டது என்று நன்றாக சரக்கடித்துவிட்டு, தொண்டர்களை உசுப்பேற்றி, எல்லா திரையரங்கு வாசல்களிலும் கலாட்டா செய்ய பூஜை போட்டு விடுவார்கள்), ஷாம்பெய்னை கொண்டாட்டமாக பார்த்து குடித்து அனுபவிக்கும் பெண்கள், சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தபடுகிறார்கள் என்று காட்டும் தைரியம், முதலாளிகளின் கார் ஒட்டுநர்கள் வாயிலாக சினிமாவிற்க்குள்ளேயே சேம் சைடு கோல் போடும் சாமர்த்தியம் [ஒரு கார் ஒட்டுநர், தன் சக கார் ஒட்டுநர்களோடு சொல்லும் வசனம், "துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலில் என்ன நடக்கிறதென்று நினைக்கிறாய், Shopping இல்ல மச்சான், வெறும் Swapping"] என நீள்கிறது. கற்பனையான கதைகளை விட சமூகத்தினை வெகு அருகிலிருந்து பார்க்கும் இதைப்போன்ற கதைகள் சமூகத்தில் சினிமா என்கிற ஒரு பெரிய ஊடகத்தின் பங்கினை அருமையாக முன்வைக்கிறது.

பார்க்க: பேஜ் 3(2005)

பின்செய்தி: இந்த படத்தின் இயக்குநர் மதுர் பண்டார்க்கர் மேல் ஒரு இளம் நடிகை சான்ஸ் தருவதாக கூறி கெடுத்துவிட்டார் என்று டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். தேவுடா...தேவுடா.....

குண்டூசி: 1997-ஆம் வருடம். பேனசோனிக் நிறுவனத்தின் அலுவலக தொடர்பு கருவிகளை விற்கும் விற்பனை பிரதிநிதியாக இருந்தேன். அப்போது ஒரு பட அதிபரின் அலுவலகத்தில் தேவையிருப்பதாக சொன்னதால், சாலிகிராமத்தில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். காத்திருந்த வேளையில் என்னருகில் ஒல்லியாய், ஒடிசலாய், தலை நிறைய முடியோடு, அழுக்கான சட்டையோடு ஒரு உருவம் அமர்ந்திருந்தது. டீ கொடுக்கும்போது, நீங்க எடுத்துகுங்க பாஸ் என எனக்கு வழி விட்டு ஒதுங்கி கொண்டது. உள்ளே கூப்பிட்டவுடன் நான் முதலில் போய் பேசி முடித்துவிட்டு வந்து, என் வண்டியை ஸ்டார்ட் செய்யும்வேளையில், பாஸ், கொஞ்சம் வண்டியை "டோ" பண்ண முடியுமா, பெட்ரோல் பங்க் வரைக்கும் என தன் டிவிஸ் 50 வண்டியை முன்னால் எடுத்தார். முனங்கிக்கொண்டே டோ செய்தேன். அந்த நபர், தற்போது நவீன தமிழ் சினிமாவின், சமரசம் செய்யாத மிக முக்கியமான படைப்பாளி: இயக்குநர் சேரன்.

This page is powered by Blogger. Isn't yours?